இனிப்பான தேனுக்கு அடியில் கசப்பான உண்மை!

Tuesday, September 21, 2010

நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் வணிகமுத்திரையுடன் கூடிய தேனில் கேடு விளைவிக்கும் ஆண்ட்டி-பயாடிக்குகள் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
"உத்தரவாதமாக சுத்தமான" தேன் என்று தங்கள் லேபிளில் போடப்பட்டு விற்பக்கப்படும் தேன்கள் மேலுக்குத்தான் இனிப்பு உள்ளுக்குள் பொதிந்திருப்பதோ கசப்பான ரகசியம். சுற்றுசூழல் மற்றும் விஞ்ஞான மையம் (CSE) நடத்திய அதிரடி ஆய்வில் இந்த உண்மை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
 கண்காணிப்பு பரிசோதனை மையத்தில்  விற்கப்படும் 12 முன்னணி நிறுவனங்களின் தேன் பாட்டில்களை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டது. இதில் டாபர், ஹிமாலயா, பதஞ்சலி, வைத்யநாத், காதி ஆகிய நிறுவனங்களின் தேன் மற்றும் சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்ரேலிய நிறுவனம் இரண்டின் தேனும் பரிசோதனை செய்யப்பட்டது. 11 தேன் மாதிரிகளில் 6-இல் கடுமையான ஆண்ட்டி-பயாடிக்குகள் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
தேனில் ஆண்ட்டி-பயாட்டிக்குகளா? சே! சே! இருக்காது சார்! என்று தானே உடனே சொல்லத் தோன்றுகிறது.? தேனுக்குள் மருந்து எப்படி வந்தது என்பது ஒரு சங்கிலித் தொடர். தேனீக்களை நோயிலிருந்து காக்கவும், அதனிடமிருந்து அதிக தேன்களை உறிஞ்சவும் தேனீக்களுக்கு இந்த ஆண்ட்டி பயாட்டிக்குகள் கொடுக்கப்படுகின்றன. நாம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தினமும் தேனை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்கிறோம்.

ஆனால் இந்த ஆண்ட்டி-பயாட்டிக் விளைவால் ரத்தம், கிட்னி, லிவர், எலும்புகள், பல் ஆகியவை கெட்டுக் குட்டிச்சுவராகும் வாய்ப்புகள் ஏராளம். மேலும் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் கொடுக்கும் ஆண்ட்டி-பயாட்டிக்குகளை இது வேலை செய்ய விடாமல் தடுத்து விடும் என்று சுறுறுச்சூழல் மற்றும் விஞ்ஞான மையத்தின் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. உஷாரான வளர்ந்த நாடுகள் இந்த ஆண்ட்டி-பயாடிக் தேனுக்கு பெரும்பாலும் தடை விதித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் தங்கள் தேனை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பும்போது அந்த விதிமுறைகளின் படி சரிபார்த்து அனுப்புகிறது. ஆனால் உள்நாட்டில் சரியான கண்காணிப்பு இல்லாததனால் இந்த ஆண்ட்டி-பயாடிக் கலப்பு தேனை விற்பனை செய்து வருகிறது. இதுதான் இந்திய நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற இரட்டைத்தர்க்கம்.