மார்ச் 19ல் சூப்பர் மூன் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை

Sunday, March 13, 2011

ஜப்பானை நேற்று மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல் கோளும் தாக்கியுள்ள நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப்பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 19ஆம் திகதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம் பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல்  தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வு உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து.

இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.  சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜோன் கெட்லி தெரிவித்துள்ளார்.