கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர் கண்டுபிடித்த "சேப்டி லாக்'

Thursday, January 13, 2011

மதுரை: மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் "சேப்டி லாக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அப்துல்ரசாக். மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 22 புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்
தியிருக்கிறார். இதற்காக கடந்தாண்டு தேசிய விருதும் பெற்றார். இவரது பகுதியில், ஆட்டோ டயர்கள் அடிக்கடி திருடு போயின. "இதுவரை 100 டயர்கள் காணாமல் போய்விட்டன.

இனி திருட்டு நடக்காமல் இருக்க ஏதாவது கண்டுபிடிங்க' என்று ஆட்டோ டிரைவர்கள் கூறினர். இதைதொடர்ந்து, "சேப்டி லாக்கை' கண்டுபிடித்த அப்துல்ரசாக் கூறியதாவது: "வீல்'லில் உள்ள நட்டுகள் எளிதாக கழற்றும் வகையில் இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. நான் கண்டுபிடித்துள்ள இந்த "சேப்டி லாக்' நட்டுகளை மறைப்பதோடு, புது டிஸைனாகவும் இருக்கும்.

எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது. இதன் காரணமாக, டியூப் காற்றை இறக்கவும் முடியாது. இதற்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கார் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுகொண்டால், அவர்களிடமும் இதை செயல்படுத்தி காட்டுவேன், என்றார். இவரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் குமாரவேல் பாராட்டினர்.